May 1, 2012

கஞ்சமலை கற்ப மூலிகைகள்

                                       
கற்ப மூலிகைகள் 
மூலிகை பெயர்கள் 

கஞ்சம் என்னும் சொல்லுக்கு பொன் என்று பொருள். (வேறு பொருள்களும் உள்ளன.) எனவே கஞ்சமலைக்கு அருகில் ஓடும் ஆறு பொன்னி நதி என்று பெயர் பெற்றது.

இந்த மலைப்பகுதியில் உள்ள கனிமத்திலிருந்தும் மூலிகைச் சாற்றினைக் கொண்டும் அந்தக் காலத்தில் பொன் தயாரித்திருக்கிறார்கள். அந்தப் பகுதி பொன்னகர் என்றும்; இப்பொன்னை மாற்றுரைத்துப் பார்த்த இடம் ஏழு மாத்தனூர் என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றுள் ஏழு மாத்தனூர் என்னுமிடம் இன்றும் இந்த கஞ்சமலைக்கு அருகில் உள்ளது.

கஞ்சமலையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஏராளமான கனிம வளங்கள் உள்ளன. இதில் அதிகமாகக் காணப்படுவது இரும்புத் தாது. இந்த இரும்புத் தாதுகளைப் பொன்னாக்கும் சக்தி கொண்ட மூலிகைகள் இங்கு உள்ளன. இரும்புத் தாதுவின் சக்தியால்தான் இங்கு காணப்படும் மூலிகைகள் கருமை நிறத்தில் இருப்பதுடன், மற்ற மலைப் பிரதேசங் களில் கிடைக்கும் மூலிகைகளைவிட சத்தும் சக்தியும் அதிகம் கொண்டவை யாகத் திகழ்கின்றன. இதனால்தான் கஞ்ச மலைப் பகுதியை கருங்காடு என்றார்கள்.

பராந்தகச் சோழன், தில்லை நடராஜப் பெருமானின் கோவிலுக்குப் பொன் வேய்ந்ததாக வரலாறு சொல்கிறது. அந்தத் தங்கத்தைக் கொடுத் தது இந்த கஞ்சமலைதான் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்வர். அது மட்டுமல்ல; மாவீரன் அலெக்ஸாண்டருக்கு போரஸ் என்ற புருஷோத் தமன் வாள் ஒன்றைப் பரிசளித்தான். அந்த வாள் இந்தக் கஞ்சமலையில் கிடைத்த இரும்பினால் உருவாக்கப்பட்டது என்றும் வரலாற்றில் குறிப்பு உள்ளது.

கஞ்சம் என்பதற்கு தாமரை என்ற பொருளும் உண்டு. கஞ்சன் என்பது பிரம்மதேவனின் பெயர் களுள் ஒன்று. தாமரைக் கருவினில் உதித்ததால் பிரம்மனின் பெயர்களுள் ஒன்றாயிற்று கஞ்சம். மேலும் இம்மலை பிரம்மதேவனால் உண்டாக்கப்பட்டது என்று புராணம் கூறும்.

முன்னொரு காலத்தில் சித்தர்கள் கற்ப மூலிகை எங்கு கிடைக்கும் என்று தேடி அலைந்தார்கள். அவர்கள் முயற்சி வீண் போனதால் கஞ்சன் என்ற திருப்பெயர் கொண்ட பிரம்மதேவனை நோக்கி பலகாலம் தவம் மேற்கொண்டார்கள். அவர்களின் தவத்தினைப் போற்றிய பிரம்மதேவன் சித்தர்கள் விரும்பும் அனைத்து மூலிகைகளும் ஒரே இடத்தில் கிடைக்குமாறு அருள்புரிந்தார். அதன்படி ஓர் அற்புதமான மலையைப் படைத்தார். அந்த மலையில் விருட்சங்கள், மூலிகைச் செடிகள் தோன்றி காடாகக் காட்சி தந்தன. அந்தக் காட்டிற்குள்ளும் மலைச்சரிவிலும் மலை இடுக்குகளிலும் பல அரிய மூலிகைகளை பிரம்மன் தோற்றுவித்தார்.

இம்மலையில் கருநெல்லி மரம், வெள்ளைச் சாரணச் செடி, நிழல் சாயா மரங்கள், இரவில் ஒளிவீசும் ஜோதி விருட்சங்கள், உரோமத் தருக்கள், கனக மரங்கள், உடும்புகள் உண்ணாச் சஞ்சீவி கள், ஆயுதங்களால் ஏற்படும் காயத்தினை உடனே குணப்படுத்தும் சல்லிய கரணி, மனித உடலில் உள்ள எலும்புகள் முறிந்தாலும் உடைந்தாலும் துண்டுபட்டாலும் உடனே இணைக்கக் கூடிய சந்தான கரணி, வெட்டுக் காயத்தால் ஏற்படும் தழும்பால் விகாரமாகத் தெரியும் முக அமைப்பை மீண்டும் அழகு படுத்தக் கூடிய சாவல்ய கரணி, உடலை விட்டு உயிர் பிரிந்தாலும் மீண்டும் உயிர் பெற்று வாழக்கூடிய அமுதசஞ்சீவி கரணி உள்ளிட்ட பல அற்புதமான மூலிகை கள், விருட்சங்கள், கிழங்குகள், வேர்கள் என நிரம்பியிருக்கும் என்றும்; அம்மூலிகைகளைக் கொண்டு கற்ப மருந்தினைச் செய்து பலன் பெறலாம் என்றும் பிரம்மன் அருளியதாக "கரபுரநாதர்' புராணம் சொல்கிறது.

பிரம்மன் தோற்றுவித்த இந்த அற்புதமான கஞ்சமலையில் ஏராளமான உயிர் காக்கும் மூலிகைகள் இன்றும் உள்ளன. அந்த மூலிகைகளை நாள், நட்சத்திரம், நேரம் பார்த்து, தகுந்த மந்திரம் சொல்லி காப்புக்கட்டி, வழிபட்டு, சாப நிவர்த்தி யானதும் அந்த மூலிகையிடம் சம்மதம் பெற்று அதனைப் பறித்து, செடியாக இருந்தால் வேர் அறுபடாமலும், கத்தியால் காயப்படுத்தாமலும் தகுந்த முறையில் அதனைக் கொண்டுவந்து நல்ல நாள் பார்த்துப் பயன்படுத்தினால், ஆரோக்கியமாக வாழலாம் என்று விவரம் அறிந்தோர் சொல்வர். இவ்வளவு சிறப்புப் பெற்ற கஞ்சமலை சேலத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

இந்தத் தொடர் மலையின்மேல் கோவில் ஒன்று உள்ளது. அந்தக் கோவிலுக்குச் செல்வது சிறிது கடினம் என்கிறார்கள் அந்த ஊர் மக்கள். மலை அடிவாரத்திலிருந்து காலை ஆறு மணியளவில் புறப்பட்டால் கோவிலை அடைய பத்து மணிக்கு மேல் ஆகுமாம். 

No comments: