August 3, 2017

காவிரிநதியும் ஆடிப்பெருக்கும்-அறிவியல் சார்ந்த இலக்கிய பார்வை


பல நூல்களின் உதவியோடு, பல தரவுகள், பல இடங்களில் பெற்று அனைத்தையும் ஒன்று சேர்த்து மாலையாக உங்கள் முன் இதை வைக்கிறேன்


பொன்னி நதி என்றும் காவிரி தாய் என்றும் எல்லோராலும் வணங்கபடும், அன்னை காவிரி பிறக்கும் இடம், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் ஒன்றான,குடகுமலை பகுதியில் உள்ள பிரம்மகிரி மலையில் தலைக்காவிரி என்ற இடத்தில் நம் தாய் பிறக்கிறாள் .
இவ்வாறு தான் பிறந்து வளர்ந்து, தன் கணவனான சமுத்திரராஜனுடன் சேர விரும்பி, அகண்டகாவிரியாக விரிந்து அதன் மூலம் மக்களை வாழ வைத்து, தன் கணவனான கடலோடு சென்று கலந்து தன் பிறப்பின் இலக்கை நிறைவேற்றுகிறாள்.

காவிரியும் பொன்னியும்

காவிரி அன்னைக்கு பொன்னி நதி என பெயர் வர காரணம், இதன் நீரில் அடங்கியிருந்த தாதுக்களில் தங்கத்தாது சற்று அதிக அளவில் இருந்ததே காரணம். இது குடகுமலையில் தங்க தாது அதிகம் இருந்த வழியாக வரும்போது தன் நீரில் அத்தாதுவை கலந்து கொண்டுவருகிறாள்.


இதை ஆவூர் மூலங்கிழார் என்ற புலவர் கீழ்வரும் பாடல் மூலம் சுட்டுகிறார்

…………………………………குடாஅது
பொன்படு நெடுவரைப் புயல்ஏறு சிலைப்பின்,
பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்
தண்புனற் படப்பை எம்மூர் ஆங்கண்
                           புறநானூறு-166

மேலும் திருஞான சம்பந்தர் இதையே உறுதி செய்யும் விதமாக பொன்கரை என தேவாரத்தில் சுட்டுகிறார்

இன்குரல்இசை கெழும் யாழ் முரலத் தன் கரம் மருவிய சதுரன் நகர்
---------------- பொன்கரை பொரு பழங்காவிரியின்...’
                                                              -திருஞானசம்பந்தர்.

ஆடிபெருக்கும் விஞ்ஞானமும்


காவிரி அன்னை புதுவெள்ளமாக உருவாகி தமிழ்நாட்டிற்க்குள் வர காரணம் ஆடி மாதம் என்பது முதுவேனில் முடியும் காலமாகும்
ஆரம்பத்தில் சித்திரை மாதம் கிழக்கில் தோன்றிய சூரியன் ஆடிமாதத்தில் வடகிழக்காக சென்று கடக ராசிமண்டலத்தில் இருக்கிறார். இந்த கடக ராசிமண்டலத்தில்  பூசம், புனர்பூசம், ஆயில்யம் என்ற மூன்று நட்சத்திர பிரிவுகள் இருக்கிறது. இந்த ஆடி 18 அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டு விட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் நுழைவார்.இந்த சனி கிரக ஆதிக்கம் நிறைந்த நட்சத்திரமண்டலத்தை விட்டுவிட்டு புதன்கிரக ஆதிக்கமுள்ள நட்சத்திரத்திற்கு சூரியன் வரும் போது பூமியில் ஒருவித காந்தசக்தி அதிர்வு தோன்றும். அது மங்கலகரமான விடயத்திற்கு ஏற்ற அதிர்வாகும்.இதை அறிந்த முன்னோர்கள் பலவிசேசங்களை அந்த மாதத்தில் அமைத்தனர்.

ஆடி18ம் விவசாய நுட்பமும்(வேளாண்மையும்)

இதனால் மேற்குதொடர்ச்சி மலைபகுதியில் மழை பெய்ய தொடங்கி அது காவிரியில் சேர தொடங்கும், இதனால் காவிரியில் புதுவெள்ளம் பொங்கி வர ஏதுவாக இருக்கும்.இதை கண்ட விவசாயிகள் புதுவெள்ள நீரை வரவேற்று தங்கள் உழவுப் பணிகளைத் தொடங்குவர். ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை பெருக்கு என்பார்கள்.

இந்த ஆறு பாயும் கரையோர பகுதிகளில் மக்களின் வேளாண் மற்றும் பாசன பயன்பாட்டிற்காக படித்துறைகள் அமைத்திருப்பார்கள். அந்த படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும்.அதன் அருகே மதகுகள் கட்டி பாசனத்திற்க்காக தனியாக வழி செய்துவைப்பார்கள் ஆடி மாதம் அன்று அந்த 18 படிகளும் மூழ்கி விடும் அளவுக்கு புது வெள்ளம் கரைபுரண்டு ஓடும்.அப்போது மதகுவழியாக தண்ணீரை பிரித்து நிலத்தின் உள்ளே விட்டு விவசாயம் செய்வார்கள்*. இதன் நன்றிகடனாக காவிரிக்கு ஆடி 18ம் நாள் புது தாலியும்,இவர்கள் இந்த நீரை நம்பி மீண்டும் பிறந்ததால், அவர்கள் வீட்டு பெண்ணுக்கும், மறுதாலி கயிறு வைத்து வணங்குவார்கள்.

எண்ணம் போல் வாழ்வும் காவிரியும்


ஆடி பெருக்கு அன்று திருமணமானவர்கள் மற்றுமின்றி ஆகாதவர்களும் தனக்கு சீக்கிரம் திருமணமாக சிறுமஞ்சள் கயிறு கட்டுகிறார்கள். மேலும் இந்த மாதத்தில் புவியில் ஏற்படும் காந்த ஒத்திசைவு காரணமாகவும், புறபொருள் மற்றும் அகம் சார்ந்து எண்ணி ஒரு செயல் நடைபெறுவதால் சிலருக்கு சீக்கிரமே திருமணம் கைகூடுகிறது.இதற்கு காவிரி அன்னை ஒரு காரணியாக இருந்து எண்ணத்தில் வழிகாட்டுகிறாள்

மக்கள் சங்கம விழா


காவிரியில் புதுவெள்ளம் பொங்கி வரும் பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று வீடுகளில் பலவகை சித்ரான்னங்கள், பொங்கல், பாயாசம் ஆகியவற்றை செய்து சுவாமிக்கு நிவேதனம் செய்தும், ஊர்களில் குடியிருப்பவர்கள் கட்டுச்சாதம் கட்டிக்கொண்டு போய் காவேரியம்மனைக் கும்பிட்டு அதன் கரையோரத்தில் அமர்ந்து சாதி, மத வேறுபாடுகள் இன்றி அனைவரும் சாப்பிடுவார்கள்.

மேலும் ஆடவர்,பெண்டிர்கள் சிறுவர்கள் காவிரிநதியில் விளையாடி மகிழ்வார்கள் இதை சங்க இலக்கியத்தில் புனல்லாடுதல் என அழைக்கின்றனர்.மேலும் அந்த அன்னைக்கு புது தாலி அணிவித்து அவள் கணவனான சமுத்திர ராஜனோடு சென்று கலக்க அனைவரும் கும்மிபாட்டுகள்,குரவை கூத்துகள் நடத்தி இந்த பதினெட்டாம் நாளை வெகு விமர்சியாக கொண்டாடுவர்.

மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப 
மணிப்பூ ஆடை - அது போர்த்துக் 
கருங்கயல் கண் விழித்து, ஒல்கி, 
நடந்தாய் வாழி காவேரி 
கருங்கயல் கண் விழித்து ஒல்கி 
நடந்த எல்லாம் நின் கணவண்
திருந்து செங்கோல் வளையாமை, 
அறிந்தேன், வாழி காவேரி 25 

பூவார் சோலை மயில் ஆலப் 
புரிந்து குயில்கள் இசைபாடக், 
காமர் மாலை அருகு அசைய 
நடந்தாய் வாழி, காவேரி! 
காமர் மாலை அருகு அசைய, 
நடந்த எல்லாம் நிண் கணவன் 
நாம வேலின் திறம் கண்டே; 
அறிந்தேன் வாழி, காவேரி 26 

வாழி அவன் தண் வளநாடு 
மகவாய், வளர்க்கும் தாய் ஆகி, 
ஊழி உய்க்கும் பேருதவி
ஒழியய் வாழி காவேரி!
                             சிலப்பதிகாரம்

என்று சிலப்பதிகாரத்தில் காவிரி அன்னையை வாழ்த்தி வரவேற்று பாடும் பாடலை நாமும் பாடி அந்த அன்னையை போற்றி இத்தெய்வ தமிழ்திருநாட்டை செல்வவளமாக்கி நம்மை எல்லாம் வாழவைக்கும் அன்னை காவிரியின் புகழ் என்றும் வளர்க என்று இக்கட்டுரையை முடிக்கின்றேன்.

மீண்டும் ஒரு அறிவியல் சார்ந்த இலக்கிய பார்வையோடு சந்திப்போம்

உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு

நன்றி

வாழ்க வளமுடன்