April 4, 2012

கஞ்சமலை காலங்கிநாதரின் குருபக்தி

                                           கஞ்சமலை

 காலங்கிநாதரின் குருபக்தி


காலங்கி சித்தர் என்பவர் பழநியில் நவபாஷாண முருகன் சிலையை பிரதிஷ்டை செய்த போகரின் குரு ஆவார். திருமந்திரம் எழுதிய திருமூலரின் மரபில் வந்தவர். கூடுவிட்டு கூடு பாய்வது உள்ளிட்ட அஷ்டமாசித்திகளை அறிந்தவர். ஏழு மடங்களை ஸ்தாபித்தவர்.

"கஞ்சம்' என்றால் "தாமரை' எனப் பொருள். மேலிருந்து பார்த்தால் தாமரை போன்ற தோற்றமுடையதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். அனுமான் சஞ்சீவி மலையுடன், தென் இலங்கைக்கு செல்லும் வழியில், அதன் ஒரு பகுதி மிகமிக குறைந்த அளவில் கீழே விழுந்ததாகவும், அதுவே கஞ்சமலை ஆயிற்று என்றும் சொல்வர். குறைந்து விழுந்ததால் "கஞ்சம்' என்ற பொருளிலும் இந்த மலைக்கு பெயர் வந்திருக்கலாம்.

காலாங்கி சித்தரும், அவருடைய குரு திருமூலரும் மலைப்பகுதிகளில் மூலிகை தேடி அலைந்தனர்.அவ்வாறு மூலிகை தேடி அலையும் போது கஞ்சமலைக்கும் வந்தனர். திருமூலர், தன் சிஷ்யன் காலாங்கியை சமைக்கச் சொல்லி விட்டு, மூலிகை தேடி காட்டுக்குள் போய்விட்டார். அரிசி வெந்து கொண்டிருந்த போது, அதைக் கிளறுவதற்கு அகப்பை ஏதும் இல்லாததால், அருகிலுள்ள ஒரு செடியிலிருந்து ஒரு குச்சியை ஒடித்துக் கிளறினார். அவ்வளவு தான் சோறு கருப்பாகி விட்டது.

""ஐயையோ! குரு வந்தால் கோபிப்பாரே,'' என்ற பயம் ஏற்பட்டது காலாங்கிக்கு. உடனே, அவர் சமைத்த சோறு முழுவதையும் சாப்பிட்டு விட்டார். சிறிது நேரத்தில் அவரது உடலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. நடுத்தர வயதில் இருந்த காலாங்கி, வாலிபனைப் போல் மாறி விட்டார். தன்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். எல்லாம், அந்த மூலிகைக்கம்பு படுத்திய பாடு தான்.

காட்டுக்குச் சென்ற திருமூலர் திரும்பி வந்தார். சீடனைக் காண வில்லை. யாரோ ஒரு இளைஞர் நின்று கொண்டிருந்தார்.

""அடேய்! இங்கே என் சீடன் ஒருவன் இருந்தான் பார்த்தாயா? பசிக்கிறது. சாப்பாடு போடாமல் எங்கே போய் விட்டான்?'' என்றார்.

இளைஞர் திருமூலரின் காலில் விழுந்தார்.

""குருவே! நான் தான் காலாங்கி,'' என்றவர் நடந்ததை எல்லாம் சொன்னார்.

திருமூலருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு, ""அடேய்! நான் வருவதற்குள் சாப்பிட்டு விட்டாயே. இதற்கு பரிகாரத்தை நீயே செய்து கொள்,'' என்றார்.

காலாங்கி வேறு வழியின்றி கை விரலைக் தொண்டைக்குழிக்குள் வைத்து சாப்பிட்டதை எல்லாம் வாந்தி எடுத்து விட்டார். திருமூலர் அவர் வாந்தி எடுத்ததை எடுத்துச் சாப்பிட்டார். அதன் பின் அவரும் இளைஞராகி விட்டார்.

இருவரும் இனைஞர்களான இடம், தற்போது கூட உள்ளது. இந்த ஊருக்கு பெயரே "இளம் பிள்ளை'. கஞ்சமலை அருகில் இந்த ஊர் இருக்கிறது. பின்னர் காலாங்கிக்கு சித்தர் என்ற அந்தஸ்தை அளித்து, அங்கு வரும் மக்களின் நோய்க்கு தருந்தபடி தகுந்த சிகிச்சையளிக்க உத்தரவிட்டார். காலாங்கியும் அங்கேயே தங்கி விட்டார். மக்கள் அவரை "காலாங்கி சித்தர்' என் அழைத்தனர். ஒரு கால கட்டத்தில் அவர் இரும்புக்கல் தாதுவாக மாறி அப்படியே அமர்ந்து விட்டார். இவர் சிவனை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்ததாகவும், இவரது தவத்திற்கு இரங்கிய சிவன், இவருக்கு ஈஸ்வரபட்டம் கொடுத்து "சித்தேஸ்வரர்" என பெயர் மாற்றியதாகவும் தல வரலாறு கூறுகிறது. இதனால் லிங்கவடிவிலேயே சித்தரின் சன்னதி தற்போது இருக்கிறது.

இத்தலத்தில் எழுந்தருளி தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சித்தேஸ்வர சுவாமி, திருமூலரின் சீடரான கஞ்சமலை சித்தர் என்று அழைக்கப்படும் காலங்கி நாதர் என்று சொல்கிறார்கள்

மேலும் கஞ்சமலையின் சப்த சித்தர்களில் கரடி சித்தர் மகிமையும் வரலாறும் காண்போம்

மீண்டும் அதை நாளைய பதிவில் காண்போம் 

1 comment:

VELU.G said...

சித்தர்கள் அறிமுகம் மிக அருமை

வாழ்த்துக்கள்