July 24, 2012

கொங்கணவர்




கேரளத்தின் கொங்கண தேசத்தில் சித்திரை மாதத்தில் உத்ர நட்சத்திரத்தில் புளிஞர் குடியில் கொங்கணர் பிறந்தார் என்று அகத்தியர் பனிரெண்டாயிரமும் போகர் ஏழாயிரமும் தெரிவிக்கின்றன.
கொங்கணரின் குரு போகர் ஆவார். கொங்கணர் சிறந்த அம்பிகை பக்தர். அம்பிகையை வழிபடும் முறையையும் மந்திரங்களையும் போகர் கொங்கணருக்கு உபதேசித்துள்ளார்.
     கொங்கணர் குருநாதரைச்சுற்றி வந்து வணங்கிவிட்டு, உடனே கிளம்பி சென்று உயர்ந்த மலை ஒன்றின் மேல் ஏறி அதன் உச்சியில் அமர்ந்து அம்பிகையை நினைத்து தவம் செய்து கொண்டிருக்கையில் மனதிற்குள் ஏதோ தோன்றவே, தவத்தைக் கைவிட்டு சக்தி வடிவங்கள் சொன்ன அற்புதமான ஒரு யாகத்தை ஆரம்பித்தார். அப்பொழுது கௌதமர் அவர் முன் வந்து “கொங்கணரே, தவத்தைச் செய்து அதன்மூலம் தான் சிவத்தை அடைய வேண்டும். எனவே யாகத்தை விடு, தவம் செய்” என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். எனவே யாகமும் நிறுத்தப்பட்டது.
     தில்லையை அடைந்த கொங்கணர் மறுபடியும் யாகத்தை செய்ய ஆரம்பித்தார். யாகம் முடிந்ததன் பயனாக கொங்கணருக்கு ஏராளமான சித்திகள் கிடைத்தன. அதனால் நிறைய குளிகைகளை உண்டாக்கினார்.
     ஒருநாள் கொங்கணர் திருமழிசை ஆழ்வாரிடம் சென்று செம்பை பொன்னாக்கும் குளிகை ஒன்றினைப் பெருமையுடன் கொடுத்து, “இது காணி கோடியை போதிக்கும்” என்றார். ஆழ்வாரோ தம் உடம்பின் அழுக்கையே திரட்டி கொடுத்து “இரசவாதக் குளிகை இது காணி கோடியை ஆக்கும்” என்று கொடுத்தார். ஆழ்வாரின் பெருமையினை கண்ட கொங்கணர், அவரோடு நட்புறவு கொண்டார். திருமழிசையாழ்வார் சந்திப்பிற்கு பிறகு தவத்தில் ஈடுபட்டார்.
கடுந்தவம் பலன் தந்தது. இரும்பையும் செம்பையும் தங்கமாக்கும் இரசவாதத்தில் கருத்தைச் செலுத்தாமல் தங்கத்தை வீசி எறிந்தார். தன் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பிச்சை எடுத்த உணவை மட்டுமே உண்டார்.
     ஒருநாள் இவர் தவம் செய்து கொண்டிருந்த மரத்தின் மேலிருந்த ஒரு கொக்கு இவர் மேல் எச்சம் இட்டது. கொங்கணர் அந்தக் கொக்கை உற்றுப் பார்த்தார். உடனே கொக்கு எரிந்து சாம்பலாகியது.
      தன் தவச்சிறப்பை வியந்து தற்பெருமை கொண்ட கொங்கணர், திருவள்ளுவர் வீட்டிலே பிச்சையின் பொருட்டு வந்தார். அப்பொழுது வாசுகி அம்மையார் திருவள்ளுவருக்கு உணவு படைத்துக் கொண்டிருந்தார். அதன் பின் காலதாமதமாக பிச்சையிட வந்ததால் சினம் கொண்ட கொங்கணர், மாதே! என்னை இவ்வளவு காலம் காக்க வைத்தாயன்றோ? என்று கூறி விழித்து நோக்கினார். ஆனால் அவ்வம்மையார் உடனே எரிந்து சாம்பலாகிவிடவில்லை. கொங்கணர் திகைப்புடன் பார்த்தார். உடனே வாசுகி அம்மையார் நகைத்து “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா!” என்று கூறினார். தான் காட்டில் செய்த செயல் இவ்வம்மையாருக்கு எவ்வாறு தெரிந்தது என்று வியந்து அவரின் கற்பின் வலிமையை உணர்ந்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
      திருவள்ளுவர் வீட்டிலிருந்து கிளம்பி வரும் வழியில் பெற்றோருக்குப் பணிவிடை செய்து அவர்களைத் தெய்வமாக வழிபடும் தர்மவியாதன் என்பவனைச் சந்தித்தார்.
      கொங்கணரைப் பார்த்ததும் தர்மவியாதன் ஓடிவந்து வணங்கினான். “சுவாமி! வாசுகியம்மையார் நலமாக இருக்கிறார்களா?” என்று கேட்டார். கொங்கணருக்கு மேலும் வியப்பு. “அப்பா! நான் அங்கிருந்து தான் வருகிறேன் என்பது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.
      தர்மவியதன், “சுவாமி! வாசுகி அம்மையார் கணவரிடம் பக்தி கொண்ட பதிவிரதை, அடியேன் பெற்றோர்கள்தான் தெய்வம் என்பதை உணர்ந்து அதன்படி செயல்படுபவன். இதனால் தான் எங்களிடம் ஏதோ சக்தி இருக்கவேண்டும்” என்று கூறி அவரிடம் விடைபெற்றான். கொங்கணர் உண்மையை உணர்ந்தார். அவரவர் தர்மப்படி கடமையைத் தவறாமல் செய்வது, தன்னடக்கத்துடன் இருப்பது ஆகியவைகள் மனிதனிடம் தெய்வ சக்தியை உண்டாக்குகிறது என்பதை உணர்ந்த கொங்கணருக்கு மனம் கனிந்தது.
     கொங்கணர் போகரைச் சந்திப்பதற்கு முன் ப சித்தர்களைச் சந்தித்து சித்துக்கள் பல பயின்றார்.
      தம் குருவான போகரை அணுகி ஆசி பெற்றார். அப்போது அவர், “திருமாளிகைத் தேவன் சாதகம் செய்வதில் கெட்டிக்காரன். நீ அவனிடம் போ, உனக்கு அமைதி கிடைக்கும்” என்று வழியனுப்பினார்.
   பின்னர் போகர் கட்டளைப்படியே திருமாளிகைத் தேவரை சந்தித்தார். கொங்கணரை எதிர்கொண்டழைத்து உபசரித்த திருமாளிகைத் தேவர், அவருக்கு பல இரகசியமான சாதனை முறைகளை உபதேசித்து சமய தீட்சை நிர்வாண தீட்சை முதலியனவற்றையும் உபதேசித்தார்.
அதன்பிறகு கொங்கணர் திருவேங்கட மலை சென்று தவம் செய்தார். அப்போது வலவேந்திரன் என்னும் சிற்றரசன் கொங்கணரைச் சந்தித்து அவர் சீடராக ஆனான். பலப் பல ஞான அனுபவ விவரங்களைக் கொங்கணரிடம் இருந்து அறிந்தான்.


கொங்கணவர் இயற்றிய நூல்கள்:
கொங்கணவர் வாதகாவியம் – 3000
கொங்கணவர் முக்காண்டங்கள் – 1500
கொங்கணவர் தனிக்குணம் – 200
கொங்கணவர் வைத்தியம் – 200
கொங்கணவர் வாதசூத்திரம் – 200
கொங்கணவர் தண்டகம் – 120
கொங்கணவர் ஞான சைதன்யம் – 109
கொங்கணவர் சரக்கு வைப்பு – 111
கொங்கணவர் கற்ப சூத்திரம் – 100
கொங்கணவர் வாலைக்கும்பி – 100
கொங்கணவர் ஞானமுக்காண்ட சூத்திரம் – 80
கொங்கணவர் ஞான வெண்பா சூத்திரம் – 49
கொங்கணவர் ஆதியந்த சூத்திரம் – 45
கொங்கணவர் மூப்பு சூத்திரம் – 40
கொங்கணவர் உற்பத்தி ஞானம் – 21
கொங்கணவர் சுத்த ஞானம் – 16 

இத்துடன் கொங்கணவர் வாலைக்கும்பி – 100  என்ற நூலும் இணைத்துள்ளேன் 

கொங்கணவர் வாலைக்கும்பி – 100











No comments: