October 13, 2016

தமிழ் மொழி ஓர் தந்திர மொழி பாகம் -17


தமிழும் முருகனும் ஓர் ஆய்வு -2

சென்ற பதிவில் சிவனாரை கண்டோம் இந்த பதிவில் சுருக்கமாக முருகனை காண்போம்(அனைத்தும் சித்தர்கள் நூலில் இருந்து தொகுக்கபட்ட்து).

பதிவு பெரிதாக இருந்தாலும் பரவாயில்லை பாடலை சுட்டிகாட்டவும் என அன்பர்கள்  கூறியதால் பாடலுடன் விளக்குகிறேன்.


முருகன்

புராண கதைப்படி முருகன் பிறப்பிடம் வடநாடு, கங்கையை ஒட்டிய பகுதி என்றும், நட்சத்திரம் விசாகம் என்றும் கூறுகிறது.

இதை தான் விளக்கமாக ஒரு காண்டத்தின் படலமாக ஸ்கந்த புராணம் கூறுகிறது.ஆனால் கந்தனுக்கு விசாகன் என்ற பெயர் இருந்ததாக பாணினி முனிவர் இயற்றிய வியகரணத்திலும்,பதஞ்சலி முனிவர் இயற்றிய மகாபாஷ்யம் நூலிலும் கூறுகிறார். இதை கொண்டே விசாகம் நட்சத்திரம் என முடிவு கட்டினர் வடநாட்டவர்.

இதையெல்லாம்(ஒரு ஓரமாக) தனியாக எடுத்து வைத்துவிட்டு சித்தர் நூல்களை ஆராய்வோம்.

முதலில் முருகன் யார் என்றால் அவர் மனிதராக பிறந்தவர் என்றும் அவர் மரபு எதுவென்றால் சைவம் என்ற பீடமாகும். இவர் பிறந்த நாள் ஆவணி மாதம் பூச நட்சத்திரத்தில் முதல் பாதத்தில் பிறந்தார்* என போகர் கூறுகிறார்.

பிரணவ ஆய்வில் அதிகம் ஈடுபட்டு மெய்பொருளை அறிந்தவர் என்றும் பின் அந்த மெய்பொருளை ஈசனுக்கும்,அகத்தியருக்கும் தெளிவுற காட்டினார் என்றும்,பின் தான் ஈசன் அதை சரிதான் என உணர்ந்து ஏற்றார் எனவும் கூறுகிறார்கள். பின் காங்கேயம் என்ற ஊரில் பிறந்தவர் என்று போகர் கூறுகிறார். அதனால் அவர் பெயர் காங்கயன் ஆயின.

குமரவேள் என்ற பெயரையும் கொண்டவர் என்று அடியாருக்கு நல்லாரும், முருகவேல் என்ற பெயரை நக்கீரரும் கூறுகின்றனார்.முதல் தமிழ் சங்கத்தில் முருகன் இருந்தார் என இறையனார் அகபொருள் சிறப்புப்பாயிரம் உரையும், தொல்காப்பிய சிறப்புப்பாயிரம் உரையும் கூறுகிறது.

மேலும் அவர் மூன்றுயுகம் கடந்தவர் என பிறந்த நாள் கூறபடுகிறது.

சரி மேலே சொன்ன விளக்கத்திற்க்கு எல்லாம் பாடலாய் சித்தர் பாடலில் காண்போம்.


"செப்பலாம் சுப்பிரமணியன் என்பார் பாரு
சிறப்பான மனிதனல்லால் வேறொன்றில்லை"
                     போகர் 7000தில் பாடல்-5622

"முத்தான வடிவேலர் முருகரப்பா
முயற்சியுடன் வயததுவும் எது என்றாக்கால்
சத்தியமாய் வயததுவும் , கணக்கோ இல்லை
சார்பான நூல்தனிலும் சொல்லவில்லை "
                       போகர் 7000த்தில் பாடல் -5852 

"ஆறான சுப்பிரமணியர்  மரபேதென்றால்
அப்பனே சைவம் என்ற பீடம் ஆமே"
                போகர் 7000த்தில் பாடல் – 5732 

"துன்னவே மூன்றுயுகம் கடந்த வேலர்
துப்புறவாய்ப் பிறந்த்தொரு நேர்மையப்பாசொன்னபடி ஆவணியாம் திங்களப்பா
சொல்லுகிறேன் முதற் பூசங்கால் தான் ஒன்றே"
                       போகர் 7000த்தில் பாடல் -5941 

"சேரர் கொங்கு வை காவூர் நனாடாதில்
ஆவினன் குடி வாழ்வான தேவர்கள் பெருமானே"
               திரு ஆவினன்குடி திருபுகழ் பாடல்-1 

"கருதவே மும்மூலம் பிரித்துச் சொல்லும்
கருவூரிற் காங்கயனே கருவாய்த் தானே"
                  சுப்பரமணியர் ஞானம் 200ல் பாடல்-31 

"பேரான ஈசனுக்கு இதுதான் சொல்லிப்
பேசாத எழுத்தினூட வரையும் காட்டிச்"
           யோகஞானம் 500ல் பாடல் 13

ஆக எப்படி பார்த்தாலும் முருகன் தமிழ்நாட்டில் பிறந்தவர் என்பது தெளிவாக தெரிகிறது. நண்பர்கள் இங்கு ஒன்று வினவலாம் இது எல்லாம் போகர் மட்டும் தான் சொன்னார? 

 இல்லை, இதை அவர் அகத்தியர் நூலானா அகத்தியம் மற்றும் அகத்தியர்12000 என்ற நூலில் இருந்து பல விடயங்களை விரித்து தன்னுடய சப்தகாண்டம் 7000த்தில் கூறியதாக கூறுகிறார். அதாவது முதல் தமிழ் சங்கத்தில் அகத்தியம் என்ற இலக்கண நூல் வெளியிட்டார்கள் அல்லவா அதிலும் அதற்கு அப்புறம் 12000 என்ற நூல் எழுதியதாகவும் அதுவும் கடல்கோளால் அழிவுற்றது எனவும் கூறுகிறார்.இது பற்றிய தகவலை அகத்தியர் தலைப்பில் காண்போம்.இப்போது அந்த பாடலை காண்போம்
       
"விருப்பமுடன் பாடிவைத்த சத்த காண்டம்
குறைந்ததொரு பொருள் எல்லாம் எந்தன் நாதர்
குருமுனியாம் அகத்தியத்தில் காணலாமே"
                  போகர் 7000த்தில் பாடல்-5693_

"காணலாம் அகத்தியனார் காவியத்தில்
கருவான பன்னீராயிரத்தில் அப்பா"
              போகர்7000த்தில் பாடல்-5694



காங்கேயம் *சிவன்மலையில்* முருகன் தங்கி தவம் செய்து, அந்த தவ ஆற்றல் முழுக்க அம்மலையில் வைத்துள்ளார் எனவும் மேலும் *சிவவாக்கிய சித்தர்* அங்கு சமாதியானர் என்றும் அவருடைய ஆற்றல் முழுக்க உள்ள இடமும் என்று என் குருநாதர்களில் ஒருவர் கூறினார்.

சென்னிமலை கந்த சஷ்டி கவசத்தை விளக்கும் இடம். அங்கு சென்று தவம் செய்தால் அதன் மறைமுக விளக்கம் கிடைக்கும் என என்னால் உறுதியாக கூறமுடியும்.அவர் வாசியோகம் செய்பவராக இருக்கவேண்டும் என்பதை நினைவு படுத்துகிறேன்.

அடுத்த பதிவில் அகத்தியரையும் கண்டு பின் தமிழ் மந்திரத்தின் உள்ளே செல்வோம்

 உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு

நன்றி

வாழ்க வளமுடன்




No comments: