February 18, 2014

மனம்

மனதை அடக்குவது என்பது இயலாத காரியம். அதன் வேகத்தை திசை திருப்புவது அல்லது அதன் நோக்கத்தை மாற்றுவது என்று சொல்வார்கள். சிலர் மனதை குதிரை என்பார்கள்.சிலர் குரங்கு என்பார்கள். சமீபத்தில் சதுரகிரிக்கு சென்றிருந்த போது அங்கிருந்த ஒரு வைத்தியர் ஒரு தகவலைச் சொன்னார். அதாவது இயற்கையாக வயதாகி இறக்கும்குரங்குகளின் மரணத்தை யாரும் பார்க்க முடியாதாம். இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அதற்குத் தெரிந்துவிடுமாம். அன்றிலிருந்து அந்தக் குரங்கானது ஒரு பாதுகாப்பான இடத்தை தேர்ந்தெடுத்து உணவு, நீர் எதுவும் அருந்தாமல் அமைதியாக அமர்ந்துவிடுமாம். அதனுடைய முடிவு காலம் வந்தவுடன் பூமி பிளந்து கொள்ள, குரங்கு அதில் அமர்ந்து கொள்ளுமாம். பூமி மூடிக் கொள்ளும் என்றார். எனக்கு அதிசயமாக இருந்தது. அந்த ஒருவாரமும் அது தவம் செய்யும் என்றார். இந்த தகவலைப் பற்றி எண்ணுகிற போது மற்ற எல்லா அதிசயங்களையும் விட, அது ஒரே இடத்தில் ஒருவாரமாக அமர்ந்திருக்கபும் என்றாரே அதுதான் எனக்கு பேரதிசயமாகப்பட்டது. 
சித்தர்களும் நம் மனமாகிய குரங்கை வெளியே இறக்கி வைத்து, வெளியில் இருந்து தன்னை பார்க்கும் தியான முறையை குருமூலமாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். 

அப்படிப்பட்ட ஒரு ஐந்து தியான முறைகளைப் பற்றி பார்ப்போமா. 
கேசரி, பூசரி, மத்திய லட்சணம், ஷண்முகீ, சாம்பவி . இது ஏதோ இனிப்பு வகைகளின் பெயரோ அல்லது இடத்தின் பெயரோ, நடிகையின் பெயரோ அல்ல இதுதான் அந்த தியான முறைகளின் பெயர். 

1 - கேசரி
- யோகி தனது இரு கண்களின் கருவிழிகளை நடுவில் நிறுத்தி, அசையாமல் மேல் நோக்கி, அருள் வெளியாகிய சிதம்பரத்தை மனதில் நிறுத்தி பார்த்துக் கொண்டிருப்பது.

2- பூசரி
- இதில் யோகியானவர் அசைக்காமல் இருகண்களின் கருவிழிகளால் மூக்கின் நுனியைப் பார்த்துக் கொண்டிருப்பது.

3 - மத்திய லட்சணம்
- இருகண்களையும் அரைப்பார்வையாக மூடிக் கொண்டு, அசையாமல் கருவிழிகளால் மூக்கின் மத்தியைப் பார்த்துக் கொண்டிருப்பது. 

4 - ஷண்முகீ
- இதில் யோகியானவர் தன் மூக்கு, கண்கள், வாய்,காது இவற்றை கைவிரல்களால் மூடிக் கொண்டு. வெளிப் பார்வையையும் மனதையும் உள்முகமாகத் திருப்பி, இருகருவிழிகளையும் அசையாமல் நடுவில் புருவ மத்தியில் நிறுத்தி பார்க்க வேண்டும்.

5 - சாம்பவி
- சிதாகாசம் என்கிற சகஸ்ராரத்தில் மனதை நிறுத்தி இரு கண்களையும் மூடாமல் கருவிழிகளை மேல் நோக்கி பார்த்தபடி அசையாமல் சொக்கியிருப்பது. இதில் எல்லாமே நாம் உள்ளிருந்துதான் தியானம் செய்கிறோம் என்றாலும் மனமானது வெளியில் இருப்பதாக பாவித்துக் கொள்ள வேண்டும். எல்லாமே பழகப்பழக கைகூடும்.
இந்த சகஸ்ராரமே பிந்துஸ்தானம்.இதையே தேவலோகம் என்று சித்தர்கள் மறைபொருளாகக் கூறுவார்கள். இங்குதான் சோம்பானம் என்னும் தேவாமிர்தம் சுரக்கின்றது. கோவில்களில் தீர்த்தம் வழங்கப்படுவது இது சுரப்பதை நினைவில் கொள்ளவே. பெரிய கோவில்களில் ஏழு பிரகாரங்கள் வைத்துக் கட்டப்படுவது, மனித உடலில் உள்ள முக்கியமான ஏழு ஆதாரங்களைச் சுட்டிக் காட்டவே. இதெல்லாமே நமக்கு சித்தர்கள் அருளியது.

மிக்க நன்றி  :   Vel MuruganRs Av 

No comments: